தமிழகத்தில் கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை கடந்த 15 ஆம் தேதி அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதற்கு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதனைபோல், மதிப்பெண் சான்றிதழ் பெறவும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் ஜூலை 24 முதல் 30 ஆம் தேதி வரை அவரவர் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கும்போது மாணவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சான்றிதழ் வழங்குவதற்கு முன்பாக பள்ளிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.