தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளையும் அதிவேக இணையத்தின் வழியே இணைக்கும் பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் 18 மாதங்களில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
61 நாடுகளை உள்ளடக்கிய டைய் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் 27வது மாநாடு டைய்கான் 2020 எனும் தலைப்பில் மதுரையில் நடைபெற்றது. அதில், 22 நாடுகளை சேர்ந்த 4,500 முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாட்டின் இடையே மேற்கொள்ளப்பட்ட தகவல் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோன்று வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கடந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளை இணையத்தின் வழியே இணைக்கும் பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் அடுத்த 18 மாதங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு ஜி.பி.பி.எஸ் வேகத்தில் இணைய வசதி கொடுக்கப்படும் எனவும், கிராமங்கள் தோறும் அதிவேக இணைய வசதி பெறுவதால் தகவல் தொழில் நுட்பத்துறையில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கிராமப்புற இளைஞர்களின் திறனை உலகளாவிய அளவில் எடுத்து செல்லும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.