பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த மாதம் இறுதியில் இங்கிலாந்துக்கு சென்றது. கொரோனா காரணமாக இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி தொடர் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் ரசிகர்கள் இன்றி மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டிக்கான அட்டவணை நேற்று (ஜூலை.7) அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் ஆகஸ்டு 5 ஆம் தேதியும், 2 ஆவது மற்றும் 3 ஆவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் முறையே ஆகஸ்டு 13 மற்றும் 21 ஆம் தேதியும் தொடங்குகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மான்செஸ்டரில் முறையே ஆகஸ்டு 28 ஆம் தேதி, ஆகஸ்டு 30 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி சவுதம்டனில் வருகிற 30 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.